ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

Logo


 
 



சனி, 26 நவம்பர், 2011

மயக்கம் என்ன - செல்வராகவன்

அயலக வாழ்வுக்கு வாழ்க்கைப்பட்ட பிறகு எப்போதும் திரைப்படங்களை திரையரங்குகளில் காண விருப்பம் இருந்ததில்லை. முதன் முறையாக இந்தத் திரைப்படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.

திரைப்படங்களை ஒரு நேரங்கடத்தியாக மட்டுமே கொண்டதாக நமது சமூகம் இருந்ததில்லை. திரைப்படங்களை வாழ்வின் அங்கமாக எடுத்துக்கொண்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டோம். அவ்வப்போது சில திரைப்படங்கள் யதார்த்த வாழ்வியலை நமக்கு காட்டினாலும், அது நமக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. மாய யதார்த்தங்களையும், மனவெழுச்சிகளையுமே மூலதனமாகக் கொண்ட இவ்வூடகத்தில் மயக்கமென்ன போன்ற முயற்சிகளை நான் வரவேற்கிறேன். மனவெழுச்சியுடனே இப்பதிவை நான் எழுதுவதாகவே கருதுகிறேன். சோ வாட், இதில் தவறிருப்பதாக எனக்கு எதுவும் தோன்றவில்லை.... நாம் அப்படித்தான் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம் நாய்க்குட்டிகளைப் போல...

மயக்கம் என்ன திரைப்படம் வாழ்க்கையை, இளைஞர்களின் உணர்வை சொல்லி இருப்பதாகவே தோன்றுகிறது. எல்லோரும் வாழ்வில் ஒருமுறையேனும் ஏமாற்றப்பட்டிருப்போம். முக்கியமான ஒரு பொழுதில் நாம் இழந்தது நம்மை ஆழமாகப் பாதித்திருக்கும். அந்த பாதிப்பினால் வாழ்வினைத் தொலைத்தவர்களை நான் நன்கறிவேன். அந்த இழப்பினை விட்டு வெளியேறி மீண்டும் வாழ்வில் சாதித்தவர்கள் சொற்பம் இருக்கக்கூடும்.


பரபரவென திருப்பங்கள் கொண்ட திரைக்கதைகளை மட்டுமே நான் திரைக்கதைகளுக்கான அங்கீகாரமாகக் கொண்டிருக்கிறேன். இந்தத்திரைப்படத்தில் திரைக்கதை அத்தனை வேகமாக இருக்கவில்லை. அதனை திரைக்கதையின் தவறாகத்தான் நினைக்கிறேன். 

மயக்கம் என்ன திரைப்படத்தின் ஆரம்பக்காட்சிகளில் மற்றுமொரு செல்வராகவன் படத்திற்கு வந்திருக்கிறோம் என்பதைத் தவிர வேறொன்றும் வித்தியாசமாய் தோன்றவில்லை.

தமிழக இளம் இயக்குனர்களில் ராஜேஷும் செல்வராகவனும் டாஸ்மாக்கிலேயே தவம் கிடந்திருக்கக் கூடும். காட்சிகளில் அதிகம் அவை புலப்படுகின்றன.

திரைப்படத்தின் முதல் பாதியை தனுஷும், இரண்டாம் பாதியை ரிச்சாவும்  தங்கள் கைகளில் எடுத்திருக்கிறார்கள். அருமையான நடிப்பால் நம்மை கட்டிப்போட்டிருக்கிறார்கள்.

ஒரே ஒரு காட்சி மூலம் என்னை மீண்டும் இந்தப் படம் நோக்கி ஈர்த்திருக்கிறார்கள். கணவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவனுடனே வாழ்க்கை வாழும் கதாபாத்திரத்தில் நம்மை ஆட்டுவிக்கிறார் ரிச்சா. ரத்தத்தைகழுவிக் கொண்டிருக்கும் காட்சியில் ஏனோ நம்மை மிகவும் இம்சிக்கிறார் ரிச்சா.

ஆங்காங்கே முத்திரை பதிக்கிறார் செல்வராகவன். எல்லீஸ் சாலையில் பேருந்து நிறுத்தக் காதல் காட்சியில் சுற்றிலும் இருக்கும் பொருள்கள் காணாமல் போய் இருவர் மட்டுமே ஒரு ஃப்ரேமுக்குள் வந்த பிறகு இயல்பாக பொருந்திப்போகும் முத்தமும், தன்னை உணரச் செய்யும் தொலைபேசி அழைப்பும்... கவிதை..

நண்பன் அறைந்ததும் “அதான் சரி... ஓகே” என்று சொல்வதைப் போலான முகபாவம் தனுஷ் & செல்வா காம்பினேஷன்.. வாவ்...

ரிச்சாவை காதலியாக, மனைவியாக மற்றும் தாயாக மாற்றும் மேக்கப் கலைஞனுக்கும் ஆடை அலங்கார நிபுணருக்கும் வாழ்த்துகள். இறுதிக்காட்சியில் ஹலோ சொல்லும்போது முகத்தில் இருக்கும் பூரிப்பு முதற்கொண்டு கவனித்து செய்திருக்கிறார் செல்வா.



கிராமத்துக் காட்சிகளின் பசுமையும், காதலின் அழகும், அள்ளிப்பருகச் செய்யும் இயற்கையின் பூரிப்பும், இளமையின் தேடல்களையும் உலாவ விட்டிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துகள்.

இசை - ஜிவி ப்ரகாஷ். எங்கிருந்து எடுத்தாண்டார் இந்த இசையை என்றே முதல் முறை நினைக்கச் செய்யும் ட்யூன்கள். ஆனால் இன்ஸ்ட்ருமெண்ட்சில் மாற்றங்களையும் ஜாலங்களையும் செய்து, ஆங்காங்கே அமைதிகாத்து கலக்கி இருக்கிறார்.

சைந்தவி & நரேஷ் ஐயர் குரலில் பாடும் பாடல் என்னை இழுத்துக்கொண்டு கடந்த காலங்களை நோக்கிப் பயணிக்கச் செய்கிறது.

மயக்கம் என்ன - செல்வராகவனின் அவசரக்கோலம். ஆனாலும் எனக்குப் பிடித்திருக்கிறது.

திங்கள், 28 மார்ச், 2011

இனி வரும் நாள்கள் - கவியரங்கக் கவிதை


பண்புடன் குழுமத்தில் நான் எழுதிய கவியரங்கக் கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

கடவுள் வாழ்த்து: 



இறைவா!
இல்லா மலிருந்தன உயிர்கள்
இல்லா மலிருந்தன உலகங்கள்
எல்லாமுமாய் நீ
என்றைக்கும் நீ
வல்லமை உனக்கே!
வணங்குகிறேன்.. 



தமிழ் வாழ்த்து:


அங்கி யணிதல் அடையாளம் யார்க்குமே
தங்கமும் தந்திடும் தோரணை - அங்ஙனமே
என்னுள் தமிழணங்கே உன்னை அணிந்தனன்
மின்னிடு வாய்நீ மிகைத்து! 



சபையோர்க்கு:


சிந்தனையில் தான் தோன்றி
சிதறியதை தொடுத்திட்டேன்
சிறப்பெனில் சுட்டிடுங்கள்
குறைஎனில் குட்டிடுங்கள் 



தலைவர் வாழ்த்து:


அறிவிற் சிறந்தீர்; அன்பில் மிகைத்தீர்
 ஆயின் ஏனோ வாழ்த்தை மறுத்தீர்
நெறிகள் கூறும் நலமே கொண்டீர்
 பாடும் குயிலே; பண்பா ளர்நீர்.
தெரிந்த வரைக்கும் தலைவர் என்றால்
 தெளிவாய் உங்கள் தகுதி வேண்டும். 



முதன்மைக் கவிதை:


கடந்து வந்த பாதை
சில நேரம் கற்கள்
சில நேரம் புற்கள்
சில நேரம் முட்கள் 



கற்கள் காயப்படுத்தலாம்
புற்கள் துன்புறுத்தலாம்
முட்களால் முடக்கப்படலாம்
பயணம் மட்டுமே நிரந்தரமானது
பயணம் வேறு வாழ்க்கை வேறா? 



வேண்டுமென்பதே வாடிக்கையாய்
வேண்டியவர்கள்!
நகைக்காய் நகைப்பவர்கள் 

தொகைக்காய் தவிப்பவர்கள்
உறவுகள் என்பதாம் பெயர் 

இவர்கள் இருப்பிடம் தேடி
செல்வம் சேர்க்கும் திறன்பெற
வேண்டும் இனி வரும் நாளில் 



வெற்றியில் மட்டுமே
சுகம் கொள்வதும்
தோல்விகள் வருவதில்
துவண்டுபோவதும்
இல்லாத மனம்
பெறவேண்டும் இனி வரும் நாளில் 



"நான்" என்றோர்களும் இல்லை
நான் தான் என்றோர்களும் இல்லை
நான் மட்டும்தான் என்பதும் இல்லை
நான் அடங்கும் ஞானம்
கைவரப் பெறவேண்டும்
இனிவரும் நாளில்.. 



இல்லையென வருவோர்க்கு
இல்லையென இயம்பாது
இயன்றதை செய்வேன்
என்பதன்று,
இல்லையென்ற சொல்லே
இல்லாது விரட்டவும்
வேண்டும் இனிவரும் நாளில் 



திருந்தட்டும் உலகந்தான்
திருந்தட்டும் மற்றவரும்
வருந்துகின்ற போக்கின்றி
வகையாக 'நான்' திருந்தவும், 



எளியவரின் வலிகளிலே
வலியவரும் வாழ்கின்ற
இயலாமை சுடுகின்ற
இன்னல்கள் மாறிடவும், 



ஒருநாளே வாக்காளர்
உயர்வுகளை பெறுவதுவா?
கருமைமிகு பணநாயகம்
கட்டாயம் மாறிடவும், 



பேரினவாத நச்சுப்பற்கள்
பீடித்திருக்கும் எம்மக்கள்
பெருமூச்சு விடுகின்ற
பெருங்காலம் வாய்த்திடவும்

தம்மக்கள் அவலங்கள்
தானுணரா தலைவர்க்கு
இன்னுயிர் மாய்த்துணர்த்தும்
இழிநிலைகள் மாறிடவும், 



நன்மைக்கும் தீமைக்கும்
நடக்கின்ற போரினிலே
என்பங்கும் உண்மைக்காய்
இருக்கின்ற வாழ்வுக்கே, 



இனிவரும் நாள்களை
இறைவா அருள்வாய்! 



நன்றிகள்.. 


வியாழன், 24 பிப்ரவரி, 2011

துரோகம் - புனைவு

காலையிலிருந்து இடது இமை துடித்துக் கொண்டிருந்தது. இன்று ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று உள்மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் அது இப்படி நண்பகலில் நடக்குமென்று எண்ணவில்லை. யாரை இத்தனை நாளாக காணக் கூடாது என்று எண்ணிக்கொண்டிருந்தேனோ, யாரை நான் இத்தனை நாளாக நட்பு பாராட்டக் கூடாது என்று எண்ணிக்கொண்டிருந்தேனோ அவனை, என்னுடைய வண்டி சிக்னலுக்காக காத்திருக்கும் பொழுதில் லாண்ட் க்ரூசர் வண்டியில் பார்த்தேன். உடன் அவளையும்.

முன்பை விட சதைப்பற்றோடு புஷ்டியாகத் தெரிந்தான். அந்த நாட்களின் நினைப்பு மீண்டும் வட்டமிடத் தொடங்கியது. அவன் அவளைக் காதலிக்காது இருந்திருந்தால் இன்று அவனை வன்மத்துடன் நான் பார்க்கும் இந்த நிலை வந்திருக்காது.

தேவதை என்றெல்லாம் கவிதை எழுதத்தூண்டும் அழகு அவள். புர்கா அணிந்து கல்லூரி வருபவள் வகுப்பிற்குள் நுழைந்ததும், தலைக்கு ஒரு துணியை கட்டிக் கொண்டு புர்காவைக் கழட்டி விடுவாள். தொளதொள ஆடையில் அங்க அவயங்கள் துள்ளியமாய்த் தெரியாது. எனக்கு முன்னாலான இருக்கையில் அவள் இருப்பாள்.

தமிழ் மாத்திரம் தெரிந்த, ஆங்கிலம் என்றால் 26 x 2 = 52 எழுத்து தான் என்றிருந்த நான், எல்லாமும் ஆங்கிலமான அந்தக் கல்லூரியில் சேர்ந்ததும் திக்கும் தெரியாது திசையும் தெரியாது தடுமாறி நின்ற பொழுதுகளில் தன் நோட்ஸ் தந்து உதவுவாள்.

வாட்டர் ட்ரீட்மெண்ட் என்றால் தண்ணிக்கு என்ன வியாதி வந்தது? என்று கேட்கும் ரகம் நான். வகுப்பில் பாடங்கள் புரியாத போது அவளை எங்கள் கல்லூரி ஆலமரத்தடிக்கு வரச் சொல்லி சந்தேகங்கள் கேட்டுக்கொள்வேன். மிகக் கேவலமான சந்தேகங்கள் இருந்தது. சிமெண்ட் தயாரித்தலின் மூலப் பொருட்கள் யாவை?, அட்டவணையில் இந்த சமன்பாடு எப்படி உதவும் என்றெல்லாம் கேட்பேன். சன்னமாய்ச் சிரித்து விட்டு, தலையில் கொட்டுவாள். அட்டவணை இல்லடா.. டேப்ளர் காலம் என்பாள்...சமன்பாடு இல்லடா ஈக்குவேசன் என்பாள். எங்களை ஒரு ஜோடி கண்கள் எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.

கல்லூரியில் சுற்றுலா அழைத்துப் போன போது, காசில்லை நான் வரவில்லை என்றேன். அப்போது என் வகுப்பில் இருந்தவர்கள் (கவனிக்க தோழர்கள் அல்ல) காசு போட்டு கூட்டிப் போனார்கள். அங்கே தான் அந்த ஒரு ஜோடிக் கண்களின் சொந்தக்காரன்.. சோ கால்டு.. லாண்ட் க்ரூசர் காரன் என்னிடம் வந்து, என்னை எப்படியாவது அவளிடம் பேச வை என்றான். என்னை டூருக்கு கூட்டிப் போனதில் பெரும் பங்கு அவனுக்கு உண்டு. அவளிடம் கேட்டதற்கு யாரிடமும் பேச மாட்டேன் என்றாள். அதை அவனிடம் சொன்னேன். அப்போது அவன் கேட்ட கேள்வி... "யாரு காசுலடா டூருக்கு வந்த... ங்கோத்தா... ஒத்தை ரூவா செலவு பண்ண துப்பில்ல... உன்னையெல்லாம் எங்க கூட சேத்து சுத்துறதே தப்பு.. இதில எம்பேச்சை கேக்க மாட்டானாமா... அடிங்கடா இவனை" என்றான். அங்கிருந்து வந்தார்களோ அந்த ஐந்து தடிமாடுகளும்.

மல்லாக்க விழுந்து காற்று குடிக்கப் போட்டுவிட்டு போய்விட்டார்கள். அப்போதிலிருந்து குற்ற உணர்ச்சியால் கூனிக்குறுகி கல்லூரியை முடித்தேன். அவனையும் அவளையும் எப்போதும் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். இன்று அவனைப் பார்த்ததில் மனம் மிகவும் வேதனையுறுகிறது. உடன் அவளையும்.

அவளை அவனுடன் இன்னொரு நாள் கட்டாயம் பார்ப்பேன். அப்போது சுற்றுலாவிற்கான காசினை 15% வட்டியோடு அவன் முகத்தில் வீசி எறிய வேண்டும். அப்போது அவளும் உடனிருக்க வேண்டும். உனக்காத்தானடி அடி வாங்கினேன் என்று கத்திவிட்டு, வன்மம் தலைக்கேறும் போதெல்லாம் உதிர்க்கும் கெட்ட வார்த்தையை அவர்களை நோக்கி ஒருமுறை உதிர்க்க வேண்டும்...

காத்துக்கொண்டிருக்கிறேன்.

சனி, 22 ஜனவரி, 2011

வலி

வலியுள்ள பொழுதுகளில் தான் இயலாமையின் கரங்கள் வீரியமாய்த் தாக்குகின்றன.

உடல் சார்ந்த மனமாகட்டும். மனம் சார்ந்த உடலாகட்டும். ஒன்றுடன் ஒன்று ஒப்பீட்டளவில் சமமில்லை என்றாலும் ஒன்றுக்கு அசூயை என்றால் மற்றொன்று அத்தனை அமைதியாக இருப்பதில்லை. மனத்தின் விளிம்புநிலையில் உண்டாகும் ஒரு சின்ன வலி, இயலாமையாலோ அல்லது ஏதேனும் ஒன்றாலோ இருந்தாலும் அந்தக் கணத்தில் உடல் முழுக்க வலியுண்டாக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. உடல் சார்ந்த வலியின்போது ஏதாவது ஒன்றைச் செய்து மனம் சார்ந்த வலியை உண்டாக்குதல் தோதாகப் படுகிறது.

இந்த வேதனைக் காலங்களில் பிடித்தவர்களுடனான அருகாமை மிகவும் தேவையானதாக இருக்கிறது. அருகாமை என்பது முகம் புதைத்து அழுவதாகவோ, தோள் சாய்ந்து அழுவதாகவோ இருக்கலாம் என்றாலும் கைகோர்த்து நடப்பதும் கூட இயல்பாக அமைந்துவிடுகிறது. மிக சோர்வான கணங்களில் அந்த அருகாமை நம்மை மிக மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும். சிலரின் அருகாமை நம்மை மிக வருந்தச் செய்யும்..

உடல் சார்ந்த வேதனைகளைத் தீர்ப்பதற்காய் மிக சாதாரணமாக மருந்துகள் புழங்குகின்றன. அதில் முக்கியமான பல் சார்ந்த வேதனையைச் சொல்லலாம். சமீப காலமாக, விஸ்டம் டூத் எனப்படும் அறிவுப்பல்லில் உண்டான வலி மிக அதி தீவிரமாக என்னை விரும்பியவர்களின் அருகாமை பற்றிய எண்ணத்தை உண்டாக்கிச் சென்றது. இங்கே மருத்துவரிடம் காட்டிய போது, அந்தப் பல் கடைசியாக இருப்பதால் தாடையை வெட்டி எடுத்து பல்லை எடுக்க வேண்டும். பிறகு சிமெண்ட் இட்டு நிரப்ப வேண்டும் என்று ஏதோ பாலம் கட்டப் போவது போல் பயமுறுத்தினர். (மூன்று டாக்டர்களும் ஒரே மாதிரி சொன்னார்கள்.).

அப்படிப்பட்ட ஒரு நாளில் தாயகம் சென்று வரத் தீர்மானித்தேன். வலியுள்ள பொழுதுகள் எப்போதும் நமக்கு உகந்ததாக இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தம் தர வைக்கக் கூடியது. மர்ஃபி விதிகள் உண்மையிலும் உண்மை. விமானங்களில் இருக்கைகள் நிரம்பி வழியும் டிசம்பர் மாத இறுதிகளில் நமக்கும் ஒரு இருக்கை கிடைப்பதற்கு நாம் நிறைய கொடுக்க வேண்டி இருக்கும். அந்தப் பொழுதுகளில் நாம் எத்தனை செலவென்றாலும் பயணப்பட வேண்டிய நிலை என்பதால் பயணச்சீட்டு வாங்கி பயணம் தொடங்கினேன்.

அவ்வப்போது சிற்சில சந்தர்ப்பங்கள் நமக்கு உதவாதெனினும் சிற்சில சந்தர்ப்பங்கள் நமக்கு மிகவும் மன அமைதி தருபவை. அப்படி என் நண்பனின் 2 வயதுக் குழந்தை என்னுடன் திருச்சி வரை வரப்போகிறான் என்றதும் மனம் மிகவும் அமைதியானது. குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது கூட மிகச்சிறந்த மன அமைதி தரும் செயல். அவனின் செய்கைகள், சேஷ்டைகள், அழுகை, எல்லாமும் மிகவும் ஆச்சர்யம் தரக்கூடிய ஒன்று.

விமானத்தில் ஒரு இடத்தில் அமராமல் தூக்கிக்கொண்டு நடக்கச் சொல்வான். ஆரம்ப இருக்கை முதல் கடைசி இருக்கை வரை நடந்து கொண்டே இருக்க, நன்றாக உறங்க விட்டு நாம் நம் இருக்கையில் அமரும்போது விழித்துக் கொள்வான். குழந்தைகளுக்கு ஒருவரைப் பிடித்து விட்டால் அவரை விடுவதே இல்லை. அப்படி என்னுடன் ஒட்டிக்கொண்ட அவனை திருச்சியில் பிரியும்போது சற்றே மனம் வலிக்கத்தான் செய்தது.

இந்தக் களேபரங்களுக்கு ஊடாக சென்ற வேலை மிக சுமுகமாக முடிந்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமே. கடவாய்ப் பல்லின் இருபுறமும் திருப்புளியால் ரெண்டு தட்டு தட்டி அசால்ட்டாக எடுத்துவிட்டார் மருத்துவர். அன்று இரவு மட்டும் எந்த விதமான சூடான அல்லது குளிர்ந்த உணவு கூடாது என்றார். அவ்வளவு தான்.

இந்தியாவில் இதற்கான செலவு ரூபாய் 860. அதற்கு முன்னால் நான் இங்கே செலவளித்த தொகை 13200 ரூபாய். வேலை முடியாமலே இந்த அளவு செலவு.. :(

ஒரு கடவாய்ப் பல்லுக்கு ரூபாய் 14000 செலவளித்தவன் நானாகத்தான் இருக்க முடியும். :(

வலிகள் தான் வாழ்வை ருசிக்க வைக்கின்றன.

வியாழன், 20 ஜனவரி, 2011

டோபி கட் (Dhobi Ghat) - கருத்து

வெளியான அன்றே பார்க்க சில படங்களை பார்த்தே ஆக வேண்டுமென்ற உத்வேகம் இருக்கிறது. அதிலும் படம் எடுக்க ஆரம்பித்த நாளிலிருந்து காத்திருந்து படம் பார்க்கவேண்டிய அளவுக்கு சில கலைஞர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். அப்படி குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவர் அமீர்கான்.

அமிதாப்பின் குரலில் ஆமிர்கானின் தயாரிப்பில் வந்த திரைப்படங்களைக் (aamir productions) காட்டும்போது அருமையாய் இருக்கிறது. அது டில்லிபெல்லி என்ற படத்தின் ட்ரைலர் என்று பிறகே புரிகிறது. இதையும் காத்திருந்து பார்க்கலாம் என்ற எண்ணம் உண்டானது.

இப்போது டோபிகட் படத்துக்கு வருவோம். ஹிந்தியிலும் கொஞ்சம் ஆங்கிலத்திலும் கொஞ்சம் கலந்த ஒரு திரைப்படம். ஆமிரின் மனைவியின் இயக்கத்தில் வந்திருக்கும் படம்.

கவிதையான படம் என்று சொல்லிவிடலாம். நிறைய கவிதைகள் புரிவதில்லையே!

நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களைச் சுற்றிய கதை. நான்கு பேருக்கும் எதிர்பார்ப்புகள். அது பூர்த்தியாகிறதா இல்லையா.. இதில் மும்பையின் கோரக் கரங்கள் என்ன செய்கிறது என்பதே கதை.

ஆமிர் ஒரு ஓவியர். அவருக்கும் என்.ஆர்.ஐ. பெண்ணுக்கும் உருவாகும் நட்பு ஒரு கதையாக, அந்த பெண்ணுக்கும் சலவைத் தொழிலாளி பையனுக்கு உள்ள நட்பு இன்னொரு கதை, அமீர்கானின் வீட்டில் முன்பு குடியிருந்த ஒரு பெண் தன் தம்பிக்கு சொல்லும் கடிதமாக இன்னொரு கதை.

ஒவ்வொன்றும் தனித்த கதையாக பயணித்திருந்தால் அத்தனை சிறப்பாக இருந்திருக்குமாவென்று தெரியவில்லை.

இந்தத் திரைப்படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகள் சில...

1. காணும் அன்றே போதையில் கலவி கொள்ளும் நாயகன் நாயகியின் மறுநாளைய உரையாடல்
2. இரண்டு டீ கொடுக்க சொன்னதும் வேலைக்காரி நாயகிக்கு கப்பிலும், சலவைத் தொழிலாளிக்கு கண்ணாடி க்ளாஸிலும் தருவது. அந்த க்ளாஸை அவள் எடுத்துக்கொண்டு வேலைக்காரியை பார்க்கும் பார்வை
3.  சிகரெட் பிடிப்பதான பாவனையில் நண்பனிடமிருந்து சிகரெட்டை வாங்கும்போது அந்த காரின் கண்ணாடிக்கும் கதவுக்கும் இடையே அவர் சிகரெட் பிடிப்பதாக காட்டுவது (உண்மையில் சிகரெட் பிடிக்கவில்லை!)
4. அந்த சலவைப் பையனின் உடன் வரும் சல்மான் கதாபாத்திரம் (மும்பை மொழியில் "டபோரி")
5. அமீரின் வீட்டில் முன்பு குடியிருந்த பெண்ணின் நடிப்பு. கண்கள் பேசுது.
6. அவள் இறந்ததும் அழும் அமீரின் நடிப்பு
7. சலவைப் பையன் ஓடி வந்து தரும் அமீரின் முகவரியை அவள் பெற்றதும் அழும் அழுகை
8. அமீரின் வீட்டுக்குப் பக்கம் இருக்கும் அந்தக் கிழவி

வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல...

இலக்கியவாதிகள் சொல்லிக்கொள்ளலாம் அருமையான திரைப்படம் என...

என்னைப் பொறுத்தவரை "காசு வேஸ்ட்".

திங்கள், 10 ஜனவரி, 2011

நட்பின் வலியும் புத்தாண்டு இழப்பும்

2003ம் ஆண்டு டிசம்பர் இறுதி நாள்.. 2004ம் வருடம் ஆரம்பம்..

இந்தப் புத்தாண்டு இரவு என் வாழ்வின் முக்கியமான நட்பைத் தரும் இரவாக மாறப்போவதை அறியாமலே நின்று கொண்டிருக்கிறேன்.

கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் காலம். மெல்லிய குளிர் பரவும் இரவு நேரம். தாம்பரம் கிழக்கு பகுதியில் கேம்ப் ரோடுக்கு அருகில் ஒரு சர்ச்சுக்குப் பக்கத்தில் அவளை முதன் முதலாகப் பார்த்தேன்.

கையில் குழந்தையுடன் தடுமாறிக் கொண்டு, கொண்டுவந்த பொருள்களை பேக் செய்ய முடியாமல் கொரியர் அலுவலகத்துக்கு வந்திருந்தாள். அழகென்றெல்லாம் சொல்ல முடியாது. கருப்பு தான். ஆனால் களையான முகம். குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும். டெல்லிக்கு ஏதோ அனுப்ப கொரியர் அலுவலகம் வந்திருந்தாள்.

நண்பனின் மோதிரத்தை அடகு வைத்து விட்டு, அவன் நண்பனுக்கு பழைய புத்தகங்கள் வாங்கி அனுப்ப கொரியர் அலுவலகம் போயிருந்தேன். உடன் என் நண்பன், மற்றுமொரு ஜூனியர் பையன்.

அவர்களெல்லாம் தன் கடமையை செய்து கொண்டிருக்க மனதில் உறங்கிக்கொண்டிருந்த ஹீரோ விழிக்க, வலிய சென்று அவளுக்கு உதவினேன். பெண் என்பதால் உதவினேனா என்று இப்போதும் சந்தேகமாக இருக்கிறது.

அவளுடனான பேச்சு படிப்பைச் சுற்றியும், அவளின் வசிப்பிடம் பற்றியும் வளர்ந்துகொண்டே போனது. சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கம் என்றாள். நிறைய பேசினோம். அந்தக் குழந்தை அவள் சித்தி குழந்தை என்றாள். ப்ராஜக்ட் விசயமாக சென்னைக்கு வந்தேன் என்றாள். இதெல்லாம் ஏன் சொல்கிறாள் என்று தோன்றினாலும், அவளைப் பேச விட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

சில நாட்கள் கழித்து, பொங்கல் வாழ்த்து அனுப்பினாள். அதற்குள் என்னை குண்டன் என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள். கல்லூரிக்குள் ஒரு தேவ தூதனைப் போல் வலம் வந்து கொண்டிருந்தேன். உடன் படிக்கும் பெண்களெல்லாம் இவன் இப்போதெல்லாம் மிக வித்தியாசமாக இருக்கிறானே என்று எண்ணம் வந்திருக்க வேண்டும். ஆனால் அது நட்பு என்றே சொல்லி வந்திருக்கிறேன்.

காதல் என்பதற்கும், நட்பு என்பதற்கும் வித்தியாசம் புரிவதில்லை. அவளுடன் பேச வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் பேசி இருக்கிறேன். அனேகமாக 7 ஆண்டுகளாக, வகுப்புத் தோழி இல்லாத ஒரு தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

சவூதியிலும், துபாய் வந்த பிறகும், அவளுடைய பிறந்தநாளுக்குத் தவறாமல் வாழ்த்து சொல்லப் பழகி இருக்கிறேன். அவளை என் வாழ்வில் ஒருத்தியாகவே எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது நட்பு என்பதாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

என் நண்பர்கள் கேலி செய்வார்கள்... என்னடா லவ்வர் மாதிரி எப்பவும் பேசிட்டு இருக்க அவ கிட்ட என்று... ஆனால் அவளுடன் பேச வேண்டும் என்று தோணும்போது பேசுவேன்.

அவள் மேற்படிப்பு படித்தாலும், பிறகு சென்னையிலேயே வேலை செய்தாலும், அவளுடனான தொலைபேசி அழைப்புகள் குறைவதாயில்லை. ஒரு முறை சென்னை சென்ற போது அவளைப் பார்த்தேன்.

"ஃபாரின்ல இருந்து வந்திருக்க, எனக்கென்ன கிஃப்ட் வாங்கிட்டு வந்த?" என்றாள்.
"உனக்கென்ன வேணும்?" என்றேன்.
"நீ நல்லா இருந்தா போதும்" என்றாள்.
"உன் மொக்கையெல்லாம் ஊர்ல வச்சுக்க... என்ன வேணும் உனக்கு?" என்றேன்.
(அப்போதெல்லாம் பதிவெழுத ஆரம்பித்திருந்தேன் என்று சொல்லித் தெரிய வேண்டாம் :-))
"எனக்கு ஏதாவது ட்ரெஸ் எடுத்துக் கொடு" என்றாள்.

அப்போதே அவளை அழைத்துக் கொண்டு சென்னை சில்க்ஸ் போய், சுடிதார் துணி எடுத்துக் கொடுத்தேன். விலையைப் பற்றிய கவலை ஏதும் இல்லை அப்போது. ஆனால் அவள் கேட்டு நான் இல்லை என்று சொல்லாத அளவில் என் நட்பு இருக்கிறது என்ற கர்வம் கொண்டேன்.

என்னுடைய திருமணத்திற்கான அழைப்பிதழை அவளுக்கு ஈ -மெயிலில் அனுப்பி இருந்தேன். அவளால் வர இயலவில்லை. அதற்கான காரணமும் சொல்லி இருந்தாள். ஆனாலும் மனம் கேட்கவில்லை. அவளுடன் பேசவில்லை.

சில நாட்களில் அவள் எனக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பினாள். ஆனால், அவள் திருமணத்துக்கு என்னால் போக இயலவில்லை. அப்போது தான் என் திருமணத்துக்கு வராமல் அவள் சொன்ன காரணம் போன்று எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பது புத்தியில் உறைத்தது.

அவள் திருமணம் நல்லபடியாக நடந்ததாகவும், மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொன்ன போது மிகவும் மகிழ்ந்தேன். எல்லாமும் சரியாய் போய்க்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இடையில் வேலை மாற்றம், இந்தியா விஜயம் என நானும் பிஸியாகப் போனதால் அவளைப் பற்றிய நினைவே இல்லை.

பின்னொருநாள் நள்ளிரவில் எனக்கு போன் அழைத்து அவள் விக்கி விக்கி அழுதாள். மனம் பதறியது. என்ன ஆச்சு என நான் கேட்கக் கேட்க அவள் அழுது கொண்டே இருந்தாள். அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தேன். பிறகு எல்லாமும் சொன்னாள். கணவன் சந்தேகப் பிராணியாம்.

எது செய்தாலும் சந்தேகமாம். அவள் மொபைலை எடுத்து பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறான். குண்டன் என்ற பெயர் பார்த்து அவளிடம் விசாரித்திருக்கிறான். அவளும் வெள்ளந்தியாக எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறாள். முன்ன பின்ன பழகாம, எந்தவித கொடுக்கல் வாங்கலும் இல்லாம எப்படி நட்பு என்கிறாய் என சரமாரியாக கேள்விகளால் துளைத்திருக்கிறான். நான் ட்ரெஸ் வாங்கித் தந்ததை அவள் சொல்லி இருக்கிறாள். அந்த ட்ரெஸ் விலை அறிந்ததும் என் மீதான சந்தேகம் வலுத்திருக்க வேண்டும்.

அவன் வீட்டில் இல்லாத பொழுது அவள் எனக்கு போன் செய்திருக்கிறாள். "என்ன செய்யணும்னு புரியல" என்றாள்.

அவளுக்கு நான் சொன்ன பதில்,
"என் நம்பரை அழித்துவிடு. முடிந்தால் என் நினைவுகளையும்"