சனி, 23 ஜனவரி, 2010

துபாய் பேருந்துகளும் குட்டி திரைப்படமும்

துபாய் என்ற கனவு தேசம் கண்களுக்கு முன்னால் சில்லு சில்லாக சிதறிக்கொண்டிருக்கிறது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வரிசையில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் கூட்டம் காணாமல் போய்விட்டது. இந்த தேசத்தின் தற்போதைய நிலை யாருமே எதிர்பார்த்திராதது. ஆனாலும் இது ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் என்ற நம்பிக்கை மட்டும் மனதின் ஓரத்தில் இருக்கிறது.


துபாயின் அனைத்து அரசுப் போக்குவரத்துகளும் “NOL" என்ற ஒற்றை அட்டை மூலம் பயணத்திற்கான கட்டணம் செலுத்த வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பேருந்துகள், தொடருந்துகள், நீர்நிலைப் பேருந்துகள் என அனைத்திற்கும் இந்த அட்டையே போதும். இதனை அங்கங்கே ரீ-சார்ஜும் செய்துகொள்ளலாம். ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கான குறைந்த பட்சக் கட்டணம் 2 திர்ஹம் 10 ஃபில்ஸ் (அதாவது 30 ரூபாய்). முழுதும் குளிரூட்டப்பட்ட பேருந்தில் பயணம் செய்வது அதி ஆனந்தம்.



அப்படி நான் நேற்று போய் பார்த்த படம் தான் “குட்டி” - feel my love.

தெள்ளிய நீரோடையான கதையை அங்கங்கே தூவி இருக்கும் காட்சிப்பதிவுகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பானதாகி இருக்கும். ஆனால் நடக்கவில்லை.

மித்ரன் இயக்கம் என்றதும் அதே பழைய தெலுகு ”ஆர்யா” படம், ஆனால் நன்றாக சொல்லி இருப்பார் என நினைத்து மூன்று மணிக்கே போய் டிக்கட் வாங்கியதற்கு என்னை நானே கண்டபடி திட்டிக் கொண்டேன்.

ஸ்ரியா என்ற பெண்ணையும் ஒரு பாடலில் அழகாய்க் காட்ட முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். அட்டகாசமாய் ஜோதிகா நடித்திருக்க வேண்டிய படம். ஒவ்வொரு காட்சியிலும் நம்மை நெளிய வைக்கிறார்.




இன்னொரு அம்சம் இசை.. தேவி ஸ்ரீ ப்ரசாத்துக்கு என்ன வந்துச்சோ.. எங்கேயோ கேட்டது போன்ற பாடல்கள்.

தனியே தெரிவது தனுஷ் மட்டும் தான். மனுசன் காதலைச் சொல்லிவிட்டு சிரிக்கும்போதும், அவள் திருமணத்தின் போது என்னுடைய காதலை நீ உணரவில்லையா எனும்போதும் உதடுகள் துடிக்க அழுகைக்கான அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டு வருகிறார்.

பழைய சினிமாக்களைப் போல் அங்கங்கே கதாநாயகன் வெல்வதும், அவ்வப்போது வில்லன் வெல்வதும் புளித்துப்போய்விட்டது.

கடைசி சண்டைக்காட்சியில் நின்று கொண்டிருக்கும் இரும்பு ட்ரம்மில் காலை வைத்து வில்லனை அடிக்கும்போது அவர் கையைப் பிடிப்பதும், பிறகு தலையால் அடிப்பதும், தலையைப் பிடித்தால் கையால் அடிப்பதும் நல்ல சிந்தனை. ஆனால் ஒல்லிப்பிச்சான் இப்படி அடிப்பதை ஜீரணிக்க முடியவில்லை ;)

பாவாடை தாவணியில் அம்மணி வரும்போது அம்சமாய் இருக்கிறார். படத்தின் பாடல்கள் மனதில் ஒட்ட மறுக்கிறது.

திரைக்கதையில் தூக்கி நிறுத்தி இருக்கலாம். ஆனால் இயக்குனர் விட்டுவிட்டார்.

நல்ல படமாகக் கூடிய தகுதிகள் இருந்தும் நீளம் தாண்டுதலில் ஓடாமலே தாண்டியதைப் போன்று இருக்கிறது.

குட்டி திரைப்படம் - விமர்சனம் செய்ய தேவை இல்லை.

சனி, 9 ஜனவரி, 2010

தமிழ் படம் - பாடல் விமர்சனம்

”தமிழ் படம்” என்று அழகிரி குடும்பத்திலிருந்து அடுத்த படம் வருகிறது..


”சென்னை 600028” புகழ் சிவா நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று கேட்டேன்.

புது இசையமைப்பாளர் கண்ணன் ரணகளம் செய்திருக்கிறார். படமும் பாடல்கள் போல் இருந்தால் 2010ம் முதல் மாபெரும் வெற்றிப்படமாய் அமையும்.

பாடல்கள் விமர்சனம் போகலாமா...??

முதல் பாடல் ஓ மகசீயா

ஹரிஹரன், ஸ்வேதாவின் தேன் குரல்களும், ரம்யமான இசையும் நம்மைக் கட்டிப்போடுகின்றன. பாடல் வரிகள் எல்லாமே தமிழ்ப் படங்களில் வந்து நமக்கு புரியாத வரிகள் தான். ஆனால் பாடல் இனிமை..

இசைக்கு மொழி தேவை இல்லை என்கிறார்களோ??

ஹம்சத்வானி ராகம் மெல்லியதாய் இழையோடுவதாகப் பட்டது. இசை தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இரண்டாம் பாடல் குத்து விளக்கு

சும்மா குத்து குத்துன்னு குத்துறாங்க உஜ்ஜயினி.. என்னமா பாட்டுங்குறீங்க,.... மெல்லிய வீணையோட ஆரம்பிக்கும் போது நல்ல க்ளாசிக்கல் சாங்க்னு நினைச்சா சரியான குத்துப்பாட்டு. அந்த வீணை கூட தர்பாரி கனடாவா இருக்கலாம்.

மூனாம் பாட்டு பச்ச மஞ்ச செவப்பு தமிழன்

சும்மா விஜய் படத்து ஓபனிங்க் சாங்க் மாதிரி சல்லுனு ஏறுது... முகேஷ் பாடி இருக்காரு... பயபுள்ள கலக்கி இருக்காரு...எல்லா கலரும் சொல்லி நம்மளை சிரிக்க வச்சிடுறாங்க.. இதுக்கு நம்ம ஷிவா எப்படி ஆடப்போறாரோன்னு நினைச்சா காமெடியா இருக்கு..

சுனாமியோட பினாமி, ஏழைகளை ஏத்திவிடும் லிஃப்ட், மெதுவடை, தயிர்வடை தத்துவம்.. கலக்கி இருக்காரு பாடலாசிரியர்.. ;)

நாலாம் பாட்டு ஒரு சூறாவளி

எலெக்ட்ரிக் பேஸும் கித்தாரும் விளையாடி இருக்கு... இந்த சீன்ல காரை விட்டு கண்ணாடியோட ஷிவா இறங்கினார்னா எல்லாரும் கொல்லுனு சிரிச்சிடுவோம். சங்கர் மகா தேவன் கலக்கி இருக்காரு...

ஐந்தாம் பாட்டு தீம் மியூசிக்

என்ன காமெடின்னா ரொம்ப சீரியஸா இருக்கு இந்த தீம் மியூசிக். கலக்கலா இருக்கும் படத்தில..

மொத்தமா சொல்லணும்னா ஸ்பூஃப் வகை சினிமா தமிழ்ல அவ்வளவா இல்லை... சத்யராஜ் பண்ணி இருக்கார் ”மகா நடிகன்”ல.. ஆனா இந்த படம் முழு நீள நகைச்சுவையா இருக்கும்னு தோணுது..

கலக்குங்க மக்கா... இனிமே முட்டாள் தனமா படமெடுக்கிறவங்கல்லாம் பயப்படணும்.. முக்கியமா விஜய் அஜித் திருந்தணும்... ;)

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

வாழ்த்துகள் பீகார்

இந்திய மாநிலங்களிலேயே பின் தங்கிய மாநிலம் என்றால் அது பீகார் என்று எடுத்தவுடன் சொல்லிவிடுவார்கள். அதாவது லாலு பிரசாத் யாதவ் ஆண்டு வந்த காலங்களில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாது, வக்கில்லாத வகையாக, வாழ்ந்து வந்த மக்களுக்கு நிதிஷ் குமார் மூலம் விடிவு பிறந்திருக்கிறது.


ஆம்... பீகார் மாநிலத்தின் ஒட்டுமொத்தமாக 2004-05 ஆண்டு முதல் 2008-09 ஆண்டு வரையான ஐந்தாண்டு கணக்கில் 11.03% வளர்ந்திருக்கிறது.

அதாவது இந்தியாவின் தொழிற்துறையில் முன்ணணியில் இருக்கும் குஜராத் மாநிலத்தை விட 0.02% குறைவு. (11.05% குஜராத்).(இதே சமயத்தில் இந்தியாவின் வளர்ச்சி வீதம் 8.49%)


இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம், 2003-04 ஆண்டில் பிகாரின் வளர்ச்சி விகிதம் (-) 5.15%.

இதிலேர்ந்து நல்ல நிர்வாகம் இருந்தால் சிறப்பான வளர்ச்சியை எட்டலாம் என்பது புலனாகிறது.

வாழ்த்துகள் பீகார்.