வெள்ளி, 23 பிப்ரவரி, 2007

தீபாவளி - திரை விமர்சனம்

இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் வந்திருக்கும் "தீபாவளி" இயக்குனர்களின் தயாரிப்புகளுக்கு வலுசேர்க்கும் மற்றுமொரு படைப்பு.

ஜெயம் ரவி - தன் அண்ணன் இயக்கத்தில் மட்டுமே வெற்றியை சுவைத்தவருக்கு இந்த படம் ஒரு மைல்கல்.

அழகான இம்சையாக "பாவனா" - 1985ல் பிறக்கும்போதே தமிழ்நாட்டை ஆட்டிப்படைப்பாள் என்று ஆசி பெற்று வந்திருக்கிறார்.

கதை ஒன்றும் அத்தனை சிறப்பு இல்லை என்றாலும் திரைக்கதை, வசனங்களில் தூக்கி நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

கதைப்படி சென்னை ராயபுரம் பகுதியில் வாழும் பெரியவர் விஜயகுமாரின் மகனான ஜெயம் ரவி எதிர் வீட்டுக்கு வரும் பாவனாவை லவ்வுகிறார். பாவனாவும் லவ்வும்போது, வில்லன் வேண்டுமே? - வருகிறார். பாவனாவின் அப்பாவாக மலையாள இயக்குனர் லால். சண்டைக்கோழி கொடுத்த தெம்பில் புகுந்து விளையாடி இருக்கிறார் லால். சில இடங்களில் ஒட்டு தாடி தெளிவாக தெரிகிறது. மேக்கப் மேன் கவனிக்க.

மருத்துவ உலகிற்கு தமிழ் திரை உலகம் தரும் மற்றுமொரு புது வியாதி. ஏதோ, "அம்னீசியா"வாம். நமக்கு அந்த கண்றாவியெல்லாம் என்ன தெரியுது?
நமக்கு தெரிந்ததெல்லாம் பாவனா, ரவி கெமிஸ்ட்ரி மட்டுமே.

சில காட்சிகளில் அட போடவைக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இசை யுவன் - சில பாடல்களில் அட...சில பாடல்களில் அச்சச்சோ! பின்னணி இசையில் அமர்க்களம்.

பாவனா நடிப்பில் மிகப்பெரிய மாற்றம், அழகாய் இருக்கிறார், அழகாய் ஆடுகிறார், அழகாய் நடிக்கவும் செய்கிறார்.

ஜெயம் ரவி நடிப்பு இன்னும் கரை சேர வேண்டும், ஆனாலும் நல்ல முன்னேற்றம் - துறு துறுவென நமக்குத்தெரிந்த எதிர்வீட்டு பையனை கண்முன் நிறுத்துகிறார்.

விஜயகுமார் அழகாக சென்னை பாஷை பேசுகிறார். மற்றோரெல்லாம் பேச வேண்டுமே என்பதற்காக முயற்சி செய்திருக்கிறார்கள் (சில சென்னை வாசிகள் தவிர).

இன்னும் எத்தனை காலம் தான் அடிபட்டு மருத்துவமனையில் கிடக்கும் கதாநாயகன் எல்லா ட்யூப்களையும் பிடுங்கிவிட்டு வந்து 50, 60 வில்லன்களை புரட்டிஎடுப்பாரோ! தெரியவில்லை.

கலை இயக்குனரின் கை வண்ணம் ரவியின் படுக்கையறையில் தெரிகிறது.

இந்த இயக்குனர்கள் மட்டும் தங்களின் படைப்புகளை இங்கேயே எடுக்கிறார்கள், மற்றோரின் தயாரிப்பு எனில் வெளிநாட்டுக்கு பறக்கிறார்கள்.

மொத்தத்தில் தீபாவளி - ரசிகர்களின் சட்டைக்கு அடித்த புது செண்ட்.