புதன், 28 ஏப்ரல், 2010

நிலாரசிகனின் கனவுகள்

ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள் என்ற கவிதை நூலை சென்ற ஃபிப்ரவரி 7ம் தேதி நண்பர் நிலாரசிகன் பரிசளித்தார். சாதாரணமாக புதுக்கவிதைகளால் மனம் நொந்து இருக்கும் எனக்கு இந்தக் கவிதைப் புத்தகம் ஆறுதலான ஒன்றாக அமைந்திருந்தது.

கவிதைப் புத்தகங்களை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அப்படியே முழுமையாக படிக்கக் கூடாது என்று மற்றுமொருமுறை செவிளில் அறைந்து சொல்லிச் சென்றது இந்தக் கவிதை நூல். ஒவ்வொரு கவிதையையும் நம் மனதில் இருத்தி வைத்து புது அனுபவத்தை அப்படியே நாம் உணர்ந்தாக வேண்டும். இந்தக் கவிதைகளை அப்படி ஒரு நாளிற்கு ஒன்று அல்லது இரண்டு என நாம் படித்து அதன் தொடர்பான சிந்தனைகளை நம்முள்ளே கொண்டிருந்தால் சிறப்பான அனுபவத்தை ஒவ்வொரு கவிதையும் நமக்குத் தரும்.

இந்தக் கவிதைகளில் தன்னையும் மீறி வெளிப்படும் கிராமத்தானின் வார்த்தைகள், ஒவ்வொரு கவிதையிலும் தன்னைத்தானே உட்புகுத்திக் கொண்டு பார்வையாளனாக மாறிக்கொள்ளும் தன்மை, வெவ்வேறு சூழ்நிலைகளிலும் வெளியாகும் கவிதைகளின் வீச்சு இவை அத்தனையும் நம்மை ஆத்மார்த்தமான ஒரு அனுபவத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

நான் ரசித்த சில கவிதைகளைப் பற்றிய என் கருத்துகள் இங்கே...

நான் பெத்த மகளே...

ஒரு தாயின் வருத்தம் தோய்ந்த குரலில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கவிதையின் வீச்சில் ஓரிரு நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தேன். தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை விட தந்தை தன் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கும் கவிதை இது.

அப்பாவுக்கு ஒரு பார்வைக் கடிதம்

ஒரு பெண்ணின் பார்வையில் தந்தையின் பாசம் சொல்லும் மற்றுமொரு கவிதை. ஆனால் வார்த்தைகளால் கோர்த்த இந்த கவிதையில் நாம் அந்த திருமண மண்டபத்தில் சென்று அமர்ந்துவிடுகிறோம் இறுதி வரிகளில்..

வலி கொண்ட மௌனங்கள்

எப்போதும் எங்கேனும் சில மௌனங்கள் கலைக்கப்படுகின்றன என்ற வார்த்தை நம் மனதில் ஆழமான சில சிந்தனைகளை விட்டுச் செல்கின்றது.

நிழல் தேடும் மரங்கள்

இதமான அரவணைப்பு என ஆரம்பிக்கும் ஒரு கவிதையில் ஒரு சில நிமிடங்களில் நம் மனதில் ஜம்மென்று உட்கார்ந்துவிடும் வார்த்தைகள் ஆழ்கடலின் அமைதியை தந்து விடுவதில்லை. மாறாக ஆழிப்பேரலையாய் சுழன்றடிக்கின்றது.

வலி

இந்தக் கவிதையில் அம்மாவின் அன்பை அப்படியே வெளிப்படுத்தி இருக்கும் கவிஞர் நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறார்.

அவரவர் வாழ்க்கை

எறும்புகளுக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்றெண்ணும் கவிதை நாயகன், தனக்கென்று வரும்போது தன்னைப் பற்றியே சிந்திக்கும் மனம் பெற்றிருப்பதை நினைக்கும்போது உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறேன், உறுத்தலுடன்.

என் பிரியமான கனவொன்று

பெயர்தெரியா பூவினைப் பார்த்து ரசிக்கும் கவிஞனின் நாட்கள் கிடைக்க தவமிருக்கலாம்.

கடலோரக்கவிதை

கால்சட்டைப் பருவநினைவுகளில் சுழலும் காதலனைக் கலைக்கும் காதலியை தாமதமாய் வந்திருக்கலாம் எனச் சொல்லும்போது காதலுக்காய் நம்மை இரக்கம் கொள்ளச் செய்கிறார்.

கருத்தப்புள்ள செவத்தரயிலு

வெரசா ஓட்டு என ரயில் ட்ரைவரை சொல்லும் வார்த்தைகளில் கண்ணாடி போட்ட நிலாரசிகன் என்ற கவிஞனையும் மீறி வெளிப்படும் கிராமத்தானால் நாம் புன்சிரிப்பை உதிர்க்கிறோம்.

மென்பொருளாளனின் வாழ்க்கை-2

அயல்தேசத்து அகதிகள் என்ற ஒரு கவிதையையும், இந்த மென்பொருளாளனின் வாழ்க்கை கவிதையையும் தமிழ் பேசத் தெரிந்த, இ-மெயில் முகவரி உள்ள எல்லாரும் நன்கறிவார்கள். எத்தனை முறை ஃபார்வேர்ட் செய்யப்பட்டது என்றே அறியாத அளவுக்கு ஃபார்வேர்ட் ஆன கவிதை இதுவாகத் தான் இருக்கும்.

உயிர் வாங்கும் தேவதை

காதலில் உழலும் எல்லோருக்கும் பொதுவான கவிதையை இந்த கவிதைக் காதலன் தந்திருக்கிறார்.

வாழ்க்கை என்னும் வரம்

தற்கொலை செய்யும் எண்ணம் இருக்கும் எல்லா முட்டாள்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை இது. வாழ்க்கை நீங்கள் நினைப்பது போல சாதாரணமானதில்லை என்று நம்மை உணர்த்தச் செய்யும் வார்த்தைகள். அற்புதமான தெள்ளிய நீரோட்டம் போன்ற இந்தக் கவிதையின் மொழிநடை நம்மிடையே மிக ஆழமாகச் சென்றடைகிறது.

விடை தெரியாக் கேள்வியொன்று

நாம் உயிருக்காக இரங்குகிறோமா அல்லது உயிரின் வடிவத்திற்கா? என்ற கவிஞனின் கேள்வி சாட்டையாய் நம் மனக் கண்முன் உருமாறுகிறது. நான் எழுதிய மரணம் எனும் கட்டுரையில் ஒரு இடத்தில் “மாடு இறந்ததற்காய் அழுத குடும்பம் பாட்டி இறந்த போது அழவில்லை. ஏனென்றால் உபயோகமான ஒன்றை இழந்தால் தான் அழுகை வரும். பாட்டிக்கு அல்ல” என்ற ரீதியில் எழுதி இருப்பேன். அதே போன்ற சிந்தனையை இங்கே காண்கிறேன். கவிஞனின் சமூக சிந்தனை இங்கே மிக ஆழமாய்க் காணக் கிடைக்கிறது.

நேற்றுப் பெய்த மழை

ஒரு இடத்தில் “பனித்துளியில் குளித்த பூ இவள்” என்று கவிஞன் சொல்லும் காட்சியில் ஒரு சின்ன காட்சியை விதைத்துச் சென்றது இந்தக் கவிதையின் வார்த்தை விளையாட்டுகளை பறைசாற்றப் போதுமானது. ஆனால் அடுத்தடுத்த வரிகளில் அவர் இறக்கி வைக்கும் இடிகளைக் கண்டு மனம் அந்த காதலர்களுக்காய் பரிதாபப் படுகிறது.

நிதர்சனங்கள்

இந்தத் தலைப்பில் உள்ள 23 கவிதைகளும் முத்துக்கள்.

வருடம் 1940

ஹிட்லரை அறைந்துவிட்டு
திரும்பினேன் கால இயந்திரத்தைக்
காணவில்லை!

அவ்வளவு தான். இந்தக் கவிதையில் சொல்லப்பட்டிருக்கிற சூழல், சிந்தனை மற்றும் அதன் அடுத்த நிகழ்வு என்னவாக இருக்கும் என்ற அனைத்தும் ஒரு சிறுகதைக்கான கருவோடு இருக்கின்றது.

மனவலி

மருத்துவமனைச் சூழலை அப்படியே ஒரு அடிபட்ட ஒருவனின் உள்ளக் கிடக்கையாக வெளிப்படுத்துமிடத்தில் சபாஷ் பெறுகிறார் கவிஞர்.

அம்மா

இந்த ஒற்றை வார்த்தையே கவிதை தான் எனினும் அம்மாவைப் பற்றிய கவிதைகள் எப்போதும் தனித்துவம் பெற்று விடுகின்றன. இந்தக் கவிதை போல..

அருமையான கவிதைத் தொகுப்பை வாசிக்கும் வாய்ப்பு தந்த நிலாரசிகனுக்கு வாழ்த்துகள். நிலாரசிகனின் நண்பன் என்பதற்காய் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறேன்.