சனி, 22 ஜனவரி, 2011

வலி

வலியுள்ள பொழுதுகளில் தான் இயலாமையின் கரங்கள் வீரியமாய்த் தாக்குகின்றன.

உடல் சார்ந்த மனமாகட்டும். மனம் சார்ந்த உடலாகட்டும். ஒன்றுடன் ஒன்று ஒப்பீட்டளவில் சமமில்லை என்றாலும் ஒன்றுக்கு அசூயை என்றால் மற்றொன்று அத்தனை அமைதியாக இருப்பதில்லை. மனத்தின் விளிம்புநிலையில் உண்டாகும் ஒரு சின்ன வலி, இயலாமையாலோ அல்லது ஏதேனும் ஒன்றாலோ இருந்தாலும் அந்தக் கணத்தில் உடல் முழுக்க வலியுண்டாக்க வேண்டுமென்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. உடல் சார்ந்த வலியின்போது ஏதாவது ஒன்றைச் செய்து மனம் சார்ந்த வலியை உண்டாக்குதல் தோதாகப் படுகிறது.

இந்த வேதனைக் காலங்களில் பிடித்தவர்களுடனான அருகாமை மிகவும் தேவையானதாக இருக்கிறது. அருகாமை என்பது முகம் புதைத்து அழுவதாகவோ, தோள் சாய்ந்து அழுவதாகவோ இருக்கலாம் என்றாலும் கைகோர்த்து நடப்பதும் கூட இயல்பாக அமைந்துவிடுகிறது. மிக சோர்வான கணங்களில் அந்த அருகாமை நம்மை மிக மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும். சிலரின் அருகாமை நம்மை மிக வருந்தச் செய்யும்..

உடல் சார்ந்த வேதனைகளைத் தீர்ப்பதற்காய் மிக சாதாரணமாக மருந்துகள் புழங்குகின்றன. அதில் முக்கியமான பல் சார்ந்த வேதனையைச் சொல்லலாம். சமீப காலமாக, விஸ்டம் டூத் எனப்படும் அறிவுப்பல்லில் உண்டான வலி மிக அதி தீவிரமாக என்னை விரும்பியவர்களின் அருகாமை பற்றிய எண்ணத்தை உண்டாக்கிச் சென்றது. இங்கே மருத்துவரிடம் காட்டிய போது, அந்தப் பல் கடைசியாக இருப்பதால் தாடையை வெட்டி எடுத்து பல்லை எடுக்க வேண்டும். பிறகு சிமெண்ட் இட்டு நிரப்ப வேண்டும் என்று ஏதோ பாலம் கட்டப் போவது போல் பயமுறுத்தினர். (மூன்று டாக்டர்களும் ஒரே மாதிரி சொன்னார்கள்.).

அப்படிப்பட்ட ஒரு நாளில் தாயகம் சென்று வரத் தீர்மானித்தேன். வலியுள்ள பொழுதுகள் எப்போதும் நமக்கு உகந்ததாக இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தம் தர வைக்கக் கூடியது. மர்ஃபி விதிகள் உண்மையிலும் உண்மை. விமானங்களில் இருக்கைகள் நிரம்பி வழியும் டிசம்பர் மாத இறுதிகளில் நமக்கும் ஒரு இருக்கை கிடைப்பதற்கு நாம் நிறைய கொடுக்க வேண்டி இருக்கும். அந்தப் பொழுதுகளில் நாம் எத்தனை செலவென்றாலும் பயணப்பட வேண்டிய நிலை என்பதால் பயணச்சீட்டு வாங்கி பயணம் தொடங்கினேன்.

அவ்வப்போது சிற்சில சந்தர்ப்பங்கள் நமக்கு உதவாதெனினும் சிற்சில சந்தர்ப்பங்கள் நமக்கு மிகவும் மன அமைதி தருபவை. அப்படி என் நண்பனின் 2 வயதுக் குழந்தை என்னுடன் திருச்சி வரை வரப்போகிறான் என்றதும் மனம் மிகவும் அமைதியானது. குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது கூட மிகச்சிறந்த மன அமைதி தரும் செயல். அவனின் செய்கைகள், சேஷ்டைகள், அழுகை, எல்லாமும் மிகவும் ஆச்சர்யம் தரக்கூடிய ஒன்று.

விமானத்தில் ஒரு இடத்தில் அமராமல் தூக்கிக்கொண்டு நடக்கச் சொல்வான். ஆரம்ப இருக்கை முதல் கடைசி இருக்கை வரை நடந்து கொண்டே இருக்க, நன்றாக உறங்க விட்டு நாம் நம் இருக்கையில் அமரும்போது விழித்துக் கொள்வான். குழந்தைகளுக்கு ஒருவரைப் பிடித்து விட்டால் அவரை விடுவதே இல்லை. அப்படி என்னுடன் ஒட்டிக்கொண்ட அவனை திருச்சியில் பிரியும்போது சற்றே மனம் வலிக்கத்தான் செய்தது.

இந்தக் களேபரங்களுக்கு ஊடாக சென்ற வேலை மிக சுமுகமாக முடிந்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமே. கடவாய்ப் பல்லின் இருபுறமும் திருப்புளியால் ரெண்டு தட்டு தட்டி அசால்ட்டாக எடுத்துவிட்டார் மருத்துவர். அன்று இரவு மட்டும் எந்த விதமான சூடான அல்லது குளிர்ந்த உணவு கூடாது என்றார். அவ்வளவு தான்.

இந்தியாவில் இதற்கான செலவு ரூபாய் 860. அதற்கு முன்னால் நான் இங்கே செலவளித்த தொகை 13200 ரூபாய். வேலை முடியாமலே இந்த அளவு செலவு.. :(

ஒரு கடவாய்ப் பல்லுக்கு ரூபாய் 14000 செலவளித்தவன் நானாகத்தான் இருக்க முடியும். :(

வலிகள் தான் வாழ்வை ருசிக்க வைக்கின்றன.

7 கருத்துகள்:

கோல்ட் சொன்னது…

ஹா ஹா நல்லா இருக்கு

ஷாஜஹான், ரியாத் சொன்னது…

அன்பு சுபைர்,

எங்களிடம் ஒரு வார்த்தை மடலிட்டோ / அலைபேசியிலோ கேட்டிருக்கலாம். நானும் சமீபத்தில் கடைவாய் பல்லை வெறும் 40 ரியால் செலவில் பிடுங்கினேன்.

காசு புடுங்க சும்மா பயமுறுத்துவாய்ங்க... போய்யான்னுட்டு பிடுங்கிருக்கணும்..

அகமது சுபைர் சொன்னது…

ஷாஜிண்ணே,

கடைசி கடவாய்ப் பல்லுண்ணே.. அதும் என்ன விஷயம்னா அது நல்லா தேய்ஞ்சு இருந்தது. பிடிச்சு இழுக்க வாய்ப்பே இல்லைன்றதால வெட்டி எடுக்கணும்னு சொல்லிட்டாங்க.

ரமேஷ் முருகன் சொன்னது…

இனி நிறைய சுயபுராணங்களை எதிர்பார்க்கலாம்போல :)
ஆனா படிக்க நல்லா இருக்குது... இந்த மாதிரி எதையாவது படிக்கும்போதுதான், நமது வாழ்கையில் நடந்த சில நிகழ்வுகள் அப்படியே நியாபகத்துல வந்துட்டுப் போகுது... குட். கேரியான்.

சிட்டுக்குருவி சொன்னது…

:)))

அகமது சுபைர் சொன்னது…

நன்றி கோல்ட், ரமேஷ் & சிட்டுக்குருவி

சுதா (admin) சொன்னது…

அருமைங்கோ..


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்